புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் சிறப்பு குழு முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திக்கு, கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை நிர்வகிக்க உதவும் வகையில் சிறப்பு குழு கடந்த ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. இக்குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியது.
இதில் உட்கட்சி விவகாரங்கள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்க மாட்டார் என்பதால் இக்கூட்டத்தில் பீகார் விவகாரங்கள் பேசப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. இதில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் எதையும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.