மயிலாடுதுறை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நேற்று நடந்த முடவன் முழுக்கு நிகழ்ச்சியில் காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் காவிரியில் நீராடி இறைவனை வழிபட்டு தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம். அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய உடல்ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதம் முடிவதற்குள் மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இறங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் நாள் முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பாடு கொரோனா தடையால் கோயிலில் மட்டும் நடைபெற்றது. தொடர்ந்து அஸ்திர தேவர் மட்டும் காவிரிகரைக்கு எடுத்து செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அஸ்திரதேவருக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியப்பொடி கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.