புதுடெல்லி: எம்டி. எம்எஸ். மருத்துவ படிப்புகளில் சேர ஐஎன்ஐ-சிஇடி (இனி-செட்) என்ற தனி நுழைவு தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட 11 மத்திய அரசு கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் பொதுவாக நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதே போல, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் பிஜி தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டு 11 கல்லூரிகளுக்கு நீட் பிஜி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக இனி-செட் என்ற தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஜிப்மர், நிமானஸ், எய்ம்ஸ் டெல்லி, போபால், நாக்பூர் உள்பட 11 கல்லூரிகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரம், எய்ம்சில் எம்பிபிஎஸ். முடித்தவர்களுக்கு அங்கேயே மேற்படிப்பில் சேருவதற்கான உள் ஒதுக்கீடு தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், பாட்னா, ரிஷிகேஷ், ராய்பூர் எய்ம்ஸ், நிமான், ஜிப்மர் கல்லூரிகளுக்கு தனி பொதுத்தேர்வு வரும் 20ம் தேதி நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இத்தேர்வுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்பட 10 நகரங்களில் வரும் 20ம் தேதி ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்களுக்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.