திருமலை: திருச்சானூர் கோயில் பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று இரவு பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் ஏழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. சின்ன சேஷம், பெரிய சேஷம், அன்னம், முத்து பல்லக்கு, சிங்கம், கற்பக விருட்சம், ஹனுமந்த வாகனம், பல்லக்கு உற்சவம், யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை சர்வ பூபால வாகனம் மற்றும் இரவு தங்க கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார்.
7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். 8ம் நாளான நாளை காலை தேருக்கு மாற்றாக சர்வ பூபால வாகனம், இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருள உள்ளார்.பிரமோற்சவம் நிறைவு நாளான வருகின்ற 19ம் தேதி காலை கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம் நடைபெற உள்ளது. இரவு கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. பிரமோற்சவத்தையொட்டி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.