திருமலை: தமிழகத்தில் வேல் யாத்திரை வெற்றிபெற வேண்டி தமிழக பாஜ தலைவர் முருகன் நேற்று ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று காலை திடீரென திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். பின்னர் விஐபி தரிசனத்தில் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினர்.
எல்.முருகன் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் நோயில் இருந்து இந்தியா விடுபட வேண்டும். மேலும், பாஜ கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை அடுத்த மாதம் 6ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைய உள்ளது. இந்த வேல் யாத்திரை எவ்வித தடையுமின்றி வெற்றியடைய வேண்டும் என்று வேண்டி சுவாமி தரிசனம் செய்தேன்’’ என்றார்.