சென்னை: தமாகா மூத்த துணை தலைவர் ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மூத்த துணை தலைவராக ஞானதேசிகன் பதவி வகித்து வருகிறார். கட்சி பணிகளில் தீவிரம் காட்டிய பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதனால் ஞானதேசிகன் வீட்டில் இருந்தபடியே கட்சி பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக குடும்பத்தினர், அப்போலோ மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு நெஞ்சுவலி தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஞானதேசிகனுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவு நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடல் நிலையயை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்தனர்.