சென்னை: மருந்தகங்களில் தடையின்றி அவசர கருத்தடை மாத்திரைகள் கிடைக்க மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கருத்தடை மாத்திரைகள் வாங்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு அவசியம் இல்லை. ஆனால் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம். தொடர்ந்து, பெரும்பாலான மருந்து கடைகளில் 2017ம் ஆண்டிற்கு பின்னர், அவசர கருத்தடை மாத்திரைக்கும் நிழல் தடை நிழவிய சூழலில், தற்போது சில்லறை மருந்து விற்பனையாகங்களில் அவசர கருத்தடை மாத்திரைகள் தடையின்றி கிடைக்கும்படி மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். அவசர கருத்தடை மாத்திரைகள் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக, பாதுகாப்பற்ற உறவு கொண்ட 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்படுகின்றன. கருக்கலைப்பு மாத்திரைகள் ஏற்கனவே இருக்கும் கர்ப்பத்தை 11 வாரங்களுக்குள் கலைக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஆதலால் பொதுமக்கள் கருத்தடை மாத்திரைகளுக்கும், கருக்கலைப்பு மாத்திரைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்வதில் மருந்தகங்கள் எந்த தடையையும் மேற்கொள்ளவில்லை என்று மருந்தக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமூக பொறுப்பு மற்றும் மருந்தின் தவறான பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கருத்தில் கொண்டே அவசர கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்வதில் சில கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாக அவர்கள் விளக்கம் தருகின்றனர். தமிழக மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறையின் புதிய முடிவானது அவசர கருத்தடை மாத்திரைகள் விற்பனையில் ஏறத்தாழ 13 ஆண்டுகளாக நீடிக்கக்கூடிய அறிவிக்கப்படாத தடைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேவையற்ற கர்ப்பம் தவிர்க்கப்படுவதோடு பெண்ணின் உடல்நலமும், எதிர்காலமும் பாதுகாக்கப்படும் என்று பெண்ணிய செயற்பாட்டாளர்களும், மகப்பேறு மருத்துவர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.