மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலா உற்சவத்தின் காவிரி கடைமுக தீர்த்தவாரி, திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். இன்று முடவன் முழுக்கு நடைபெறுகிறது. மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த விழா மயூரநாதர் ஆலயம், பரிமளரெங்கநாதர் ஆலயம், வேதாரண்யேஸ்வரர் ஆலயம், விஸ்வநாதர் ஆலயம், ஐயாறப்பர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில், வேதாரண்யேஸ்வரர் கோயில், ஐயாறப்பர் கோயில், விஸ்வநாதர் கோயில் ஆகிய சிவாலயங்களிலும், பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆலய வளாகங்களிலேயே எழுந்தருளினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஓதியபடி, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுவாமி ஊர்வலம் கோயில் வளாகத்திற்குள்ளேயே துவங்கியது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வீதியுலா நடத்துவது தவிர்க்கப்பட்டது, காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அனைத்து ஆலயங்களின் அஸ்திரதேவருக்கு ஒரே நேரத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. துலா உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு, காவிரி துலா கட்ட காவிரியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இன்று (16ம்தேதி) காலையில் முடவன்முழுக்கு நடைபெற உள்ளது.