சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வருவதோடு அணையை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி நுழைந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். நேற்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அணை பூங்கா அருகே உள்ள புங்கார் பழத்தோட்ட நுழைவு வாயில் அருகே வந்து அங்குள்ள இரும்பு கேட்டை திறந்து வெளியே தார் சாலைக்கு வந்தது. யானை கேட்டை திறந்து வெளியே வருவதைக் கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டியடித்தனர்.