திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை பத்மாவதி தாயார் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் தங்க, வைர அலங்காரத்தில் தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். பிரமோற்சவத்தையொட்டி ஆந்திர மாநில அரசு கொறடா பாஸ்கர் ரெட்டி பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.
இதனை கோயில் இணை செயல் அலுவலர் பசந்த்குமார் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதங்களை வழங்கினார். இதையடுத்து நேற்றிரவு 8 மணியளவில் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் ஏழுமலையான் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்ககாசு மாலை பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.