பெரம்பூர்: திருவிக நகர் மதுரை சாமி மடம் மெயின் ேராட்டில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் 2வது தளத்தில் 3 குடிசை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், முருகன், திருமலை, தினேஷ் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு அருகில் சிலர் வெடித்த ராக்கெட் பட்டாசு இங்குள்ள ஒரு குடிசை மீது விழுந்து தீப்பிடித்தது.
காற்றின் வேகம் காரணமாக அடுத்த 2 குடிசைகளுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக அதில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடிசைகள் மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.