சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்வோரின் வசதிக்காக 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகள் கூட்டத்தை பொறுத்து நாள் தோறும் 2 ஆயிரம் பேருந்து வரையில் இயக்கப்பட்டு வந்தது. அதன்படி, 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் 8 ஆயிரத்து 753 பேருந்துகளில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 553 பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்தநிலையில், இவர்கள் சென்னை திரும்பவும், சென்னையை தவிர்த்து பல்வேறு இடங்களுக்கு செல்லவும் வசதியாக வரும் 18ம் தேதி வரையில் 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. நேற்று முதல் இந்த சிறப்பு பேருந்து இயக்க சேவை தொடங்கியுள்ளது. அதன்படி, நாள் தோறும் 2 ஆயிரம் பேருந்துகள் வீதம் 4 நாட்களுக்கு 8 ஆயிரம் பேருந்துகளும், இதை தவிர்த்து 8 ஆயிரத்து 26 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பேருந்தை பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை திரும்ப மொத்தம் 3,416 பேருந்துகளும், சென்னை தவிர்த்து இதர இடங்களுக்கு 4,610 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.