மயிலாடுதுறை: துலா உற்சவத்தின் கடைமுக தீர்த்தவாரியான இன்று மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கி கொண்டதாக ஐதீகம். இன்று கடைமுக தீர்த்தவாரி நடக்கிறது.
இதையொட்டி மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில், ஐயாறப்பர் கோயில், விஸ்வநாதர் கோயில் ஆகிய சிவன் கோயிங்களிலும், பரிமள ரங்கநாதர் கோயிலிலும் மதியம் 1.30 மணியளவில் தீர்த்தவாரி நடந்தது. இதனால் காவிரி துலா கட்ட காவிரியில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வந்து புனித நீராடி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு உத்தரவாலும், சுவாமி வீதியுலா புறப்பாடு இல்லாததாலும் பக்தர்களின் வரவு குறைவாக உள்ளது. இன்று மதியம் நடந்த தீர்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு மட்டுமே புனித நீராட்டும் நிகழ்ச்சி நடந்தது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.