விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூர் ஊராட்சி கிழக்கு காலனிக்கு செல்லும் 800 மீட்டர் தூர சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இச்சாலையை தார்சாலையாக புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், ஜல்லிகளை கொட்டி, வெறும் செம்மண்ணை கொட்டிவிட்டு சென்றதோடு சரி. அதன்பிறகு தார்சாலை போடும் பணியை மேற்கொள்ளவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக, செம்மண் கொட்டப்பட்டு அத்தோடு பணிகள் நின்றது.
இதுகுறித்து அக்கிராம பொதுமக்கள் கூறுகையில், சாலை போடாமல் மண் சாலையாக இருந்த போது எங்களுக்கு பாதிப்பில்லை. தற்போது, செம்மண் கொட்டிவிட்டுச் சென்றதால் மழைக்காலங்களில் கீழே வழுக்கி விழுந்தோம். தார்சாலைக்கு டெண்டர் விட்டுவிட்டு, செம்மண் சாலையை மட்டும் போட்டு, பில் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்ட போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உடனடியாக தார்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.