வள்ளியூர்: வள்ளியூர் அருகேயுள்ள கேசவநேரியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றி புதிய நிழற்குடை அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வள்ளியூர் அருகே உள்ளது கேசவநேரி கிராமம். இங்குள்ள பயணிகள் நிழற்குடை கடந்த 10 வருடங்களாக பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் நிழற்குடையின் மேற்கூரை கான்கீரிட் காரைகள் பெயர்ந்து பயணிகள் தலையில் விழுந்து காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பல ஆண்டுகளாக வண்ணம் பூசாமல் பராமரிப்பின்றி உள்ளதால் சுவர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இப்பகுதியில் உள்ள அன்றாடம் கூலி வேலைகளுக்கு செல்லும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது. எனவே சேதமடைந்து கிடக்கும் இந்ந நிழற்குடையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.