×

வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் இல்லை.. ‘டிரம்ப்பின் புகார்களில் உண்மையில்லை’ : அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு

வாஷிங்டன், : ‘‘வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் எந்த குளறுபடிகளும் நடக்கவில்லை. வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை. வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை. அதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புகார்களில் உண்மை இல்லை’’ என்று அமெரிக்க தேர்தல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் அதிபர் பதவிக்கான இத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட்டார். இதில் வெற்றிக்கு தேவை 270 எலக்டோரல் வாக்குகள் என்ற நிலையில், ஜோ பிடன் 290 வாக்குகள் பெற்று, அமெரிக்காவின் புதிய அதிபராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரியில் இவர் அதிபராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் 217 எலக்டோரல் வாக்குகள் பெற்று தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார். ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். மிகப்பெரிய மோசடியால் எனது வெற்றியை பறித்துக் கொண்டு விட்டனர்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். ெடானால்டின் இந்த குற்றச்சாட்டு, அமரெிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் பதவியின் மாண்பை இவர் கெடுக்கிறார் என்று மக்கள் குமுறி வருகின்றனர்.இந்நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அமெரிக்காவின் மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ‘‘நவ.3ம் தேதி அமெரிக்காவில் நடந்த வாக்குப்பதிவு, உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பணிகளும் மிகவும் முறையாகவும், உரிய பாதுகாப்புடனும் நடந்தன. வாக்குச்சீட்டுகள் ஏதும் காணாமல் போகவில்லை. வாக்குச்சீட்டுகள் எதுவும் மாற்றப்படவில்லை. மாற்றவும் முடியாது. வாக்குப்பதிவில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. டொனால்ட் டிரம்ப்பின் புகார்களில் எந்த உண்மையும் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழும் என்று எங்களுக்கு தெரியும். அவற்றை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இந்த தேர்தல் அமெரிக்காவின் மாண்பை கருத்தில் கொண்டு மிகவும் முறையாகவும், மிகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் அமெரிக்க மக்களுக்கு உறுதியளிக்கிறோம்.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து மாகாணங்களிலும் பதிவான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அனைத்து வாக்குச்சீட்டுகளும் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. தேவைப்பட்டால் எந்த மாகாணத்திலும், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்பும், இதே போன்று டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, அறிக்கையாகவே வெளியிட்டுள்ளது. மேலும், ‘வாக்குப்பதிவுகளில் எந்த குளறுபடிகளும் நடைபெறவில்லை’ என்று தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் போலீஸ் உயரதிகாரிகளும், தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Tags : Trump ,election officials ,US , Voting, Counting, U.S. Electoral Officers, Notice
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...