சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மோகன்லால் ஜூவல்லரிக்கு
சொந்தமான 32 இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 814 கிலோ தங்கம்
உட்பட ரூ.500 கோடி அளவுக்கு வருமானத்தை மறைத்தது வருமான வரித்துறை நடத்திய
சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்து ஆவணங்களும் சிக்கி
உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன்லால் கபாரி. இவர் சென்னை
சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி.போஸ் சாலையில் மோகன்லால் ஜூவல்லரி என்ற பெயரில்
மொத்த தங்க நகை கடை மற்றும் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
சென்னையை
தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த மொத்த விற்பனை கடைக்கு மும்பை,
கொல்கத்தா, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் கிளைகள்
உள்ளது. இதுதவிர தமிழகம் முழுவதிலும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் நகைகளை
ஆர்டர் செய்து வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் மோகன்லால்
ஜூவல்லரியில் மொத்த நகைகள் விற்பனையில் வருமான வரித்துறைக்கு கணக்கு
குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேநேரம் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் தங்க நகைகளை முறையான ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் வந்தது.
அதைதொடர்ந்து
வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 10ம்தேதி காலை முதல் நள்ளிரவு வரை
என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள மோகன்லால் ஜூவல்லரி கடை மற்றும்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள கடையின் உரிமையாளர் மோகன்லால் கபாரி வீடு மற்றும்
அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் மும்பை, கொல்கத்தாவில் உள்ள அலுவலகம்
மற்றும் நகைக்கடைகள் என மொத்தம் 32 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த
அதிரடி சோதனையில் இரண்டு விதமாக கணக்குகளை கையாண்டு வந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, 2018-19ம் ஆண்டு மோகன்லால் ஜூவல்லரி
சார்பில் ரூ.102 கோடி வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு
கட்டப்பட்டது. அதன் பிறகு 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுக்கான வருமான வரி
கணக்கை மோகன்லால் ஜூவல்லரி சார்பில் முறையாக கணக்கு காட்டாதது தெரியவந்தது.
32 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும்
ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர். அதில்,
கணக்கில் வராத ரூ.400 கோடி மதிப்புள்ள 814 கிலோ தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், வேறு ஒரு இடத்தில் உள்ள 50 கிலோ
தங்கம் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில்
மொத்தம் ரூ.500 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதும் தெரியவந்தது. ஆனால்
மோகன்லால் ஜூவல்லரி சார்பில் வெறும் ரூ.150 கோடி மட்டும் வருமானம்
வந்ததாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டி மோசடி செய்ததாக வருமான
வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.500 கோடிக்கு வரி ஏய்ப்பு
நடந்துள்ளது. ஆனால் வெறும் ரூ.150 கோடி மட்டும் வருமானம் வந்ததாக வருமான
வரித்துறைக்கு கணக்கு காட்டி மோசடி செய்துள்ளனர்.