புதுடெல்லி: மும்பை கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஸ்கார்பியன் ரக 5வது நீர்மூழ்கி கப்பலான ‘வகிர்’, கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடற்படையின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணியை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களில் முதல் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரியை கட்டும் பணி 2015ல் தொடங்கி, 2017ம் ஆண்டின் பிற்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, காந்தேரி, கரஞ்ச், மற்றும் வேலா ஆகிய நீர்மூழ்கி கப்பல்களை கட்டும் பணி தொடங்கப்பட்டன.
இந்நிலையில், 5வது நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இக்கப்பலுக்கு இந்திய பெருங்கடலின் ஆழ்கடலில் வாழக்கூடிய வேட்டை மீனான, ‘வகிர்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு இணை அமைச்சர் பத் நாயக், வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக மேற்கு கடற்படை கமாண்ட் தலைவர் துணை அட்மிரல் ஆர்பி பண்டிட் கூறுகையில், “ நாங்கள் ஏற்கனவே இரண்டு கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை வைத்துள்ளோம். மீதமுள்ள 4 நீர்மூழ்கி கப்பல்களையும் மிக குறைந்த காலத்தில் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார். ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலானது கடலின் மேற்பரப்பிலும், கடலுக்குள்ளும் பயன்படுத்தும் நவீன ஆயுதங்களை கையாளும் திறன் கொண்டது.