×

பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததி ராய் நூலை நீக்குவதா? : கி.வீரமணி கண்டனம்

சென்னை : பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததி ராயின் நூலை நீக்கியதற்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 12) வெளியிட்ட அறிக்கை:

கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளில் பறிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமை. அதிலும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்கள் வாயிலாக பல்வேறு வகை கருத்தாக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

அம்முறையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பாடப் புத்தகமாக இருந்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் (Walking with the Comrades) எனும் துணைப் பாட நூலை, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே காரணத்தால், பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

முன்பு பெரியாரின் உண்மை ராமாயணம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பான சச்சி ராமாயண் உத்தரப் பிரதேச அரசால் தடை செய்யப்பட்டதை எதிர்த்து, நெருக்கடி நிலை காலத்தில் மேல் முறையீடாக உச்ச நீதிமன்றத்தில் செய்த நிலையில், நெருக்கடி நிலை காலத்தில்கூட, இப்படி கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்ற முறையில், முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. ஆயிரம் பூக்கள் மலரட்டும்; ஆயிரம் எண்ணங்கள் பரவட்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படி நடைபெறுகிறது என்றால் தமிழ்நாட்டில் பாஜக அரசு நடக்கிறதா? அல்லது அதிமுக அரசா? இரண்டும் ஒன்றுதானே. அவர்கள் எஜமானர்கள், இவர்கள் அரசு அடிமை அரசா? பல்கலைக்கழகங்கள் பவ்விப் பணிந்து செயல்படுவது, மகா வெட்கம்!

உடனடியாக இத்தடையை நீக்கி மீண்டும் பாடமாக்க வேண்டும். பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பல்வகை சிந்தனைகளைத் தெரிந்துகொள்வது எப்படித் தவறு ஆகும்? வைக்கும்போதே அது தெரிந்துதானே பாட நூலாக வைக்கப்பட்டது? இப்படி மிரட்டினால் அது எங்கு போய் நிற்கும்?.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


Tags : Arundhati Roy ,K. Veeramani , K. Veeramani, condemnation
× RELATED இந்தியா கூட்டணியின் வெற்றி...