×

ஈஸ்வரன் படத்தில் பாம்பை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு நோட்டீஸ்: உரிய பதிலளிக்கவில்லை எனில் நடவடிக்கை என வனத்துறை எச்சரிக்கை..!!

சென்னை: ஈஸ்வரன் திரைப்படத்திற்கான போஸ்டரில் பாம்பை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், முன்னணி நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படப்பிடிப்பானது முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் வெளிவர தயார் நிலையில் உள்ளதாக இயக்குநர் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திரைப்படத்தின் முதற்கட்ட போஸ்டரானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சிம்பு தனது கையில் பாம்பை பிடித்தவாறு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் சிம்பு, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர் பாம்பை துன்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இயக்குநர் சுசீந்திரன் திரைப்படம் குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

அதில் சிம்பு கையில் வைத்திருப்பது பிளாஸ்டிக் பாம்பு எனவும் கிராபிக்ஸ் மூலமாக அது ஒரிஜினல் போன்று காட்சியளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அடுத்த சில தினங்களிலேயே நடிகர் சிம்புவின் மற்றொரு காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதாவது சிம்பு தனது நண்பர்களுடன் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பாம்பை துன்புறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிம்பு, இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு வனத்துறையினர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர். இதுவரை பதில் ஏதும் வராததால் 2ம் முறையாக இன்று வனத்துறை அதிகாரிகள் சிம்புவின் வீடு, ஈஸ்வரன் படக்குழுவினர் வீட்டிற்கு நேரில் சென்று நோட்டீஸ் அளித்தனர். நோட்டீஸுக்கு உரிய பதிலளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Simbu ,Forest Department , Eeswaran, Snake, Actor Simbu, Forest Department Notice
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...