×

திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறக்க தாமதித்தால் உத்தரவிட நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,  மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் மெரினாவில் திடீர் சோதனை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த டெண்டரை திறக்க இயலவில்லை என்றார். இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை, இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என்றார்.

இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.



Tags : opening ,Marina Beach ,High Court , Delay in opening of Marina Beach while theaters are open may be ordered: High Court warns
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...