கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனை நுழைவுவாயில அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்கக் கோரி கண்காணிப்பாளரிடம் ரத்த தான கழக கூட்டமைப்பினர் மனு அளித்தனர். கோவில்பட்டி அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனை நுழைவு வாயில் அருகில் உயர்மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைத்து இருப்பதாக தெரிகிறது.
இதனால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை மருத்துவமனை வளாகத்தில் ஆபத்தில்லா பகுதியில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் ரத்ததான கழகத்தின் தமிழரசன், உமாசங்கர், ராஜபாண்டி, ரவிக்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.