மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற போது அங்கு கொடூரமாக இருவரும் அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளத்தின் காவல் ஆய்வாளர் உள்பட 10 காவலர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட 10 காவலர்களும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மீதமுள்ள 9 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே இந்த வழக்கானது சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கானது நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.