ஒடுகத்தூர்: குருவராஜபாளையம் பகுதியில் சாலையோரம் வீசி செல்லும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குருவராஜபாளையம்- ஆலங்காயம் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் தொடர்ந்து சாலையோரங்களில் குப்பைகளை மூட்டையாக கட்டி வீசி செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதியடைகின்றனர். இதனால், அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை ஊராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் குப்பை மூட்டைகளை வீசி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.