ஜம்மு: ஜம்ம காஷ்மீர் எல்லையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் உள்ள கிராமங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆத்திரத்தில் இருக்கிறது. இதனால், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை அதிகரித்துள்ளது. எல்லையில் ஏதாவது ஒரு இடத்தில் அது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில், மூன்று பகுதிகளில் நேற்று அது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. இங்குள்ள குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில், சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.
இது குறித்து, இந்திய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர், கீர்னி, தாஸ்பா ஆகிய 3 பகுதிகளில் ேநற்று காலை 10.30 மணிக்கு முதல் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது,” என்றார். இதே மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகதியில் கடந்த மாதம் 1ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ராஜோரி மாவட்டத்தில் செப். 2, 5ம் தேதிளில் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குட்போராவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, வீரர்கள் மீது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்? என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.