புதுடெல்லி: கடந்த மாதம் நடத்தப்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.9,627 கோடி கடன் வாங்கிக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்து, கடந்த 2ம் தேதி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில், ‘மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு மட்டும் ரூ.335 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.