×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு...!! கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் 9 பேருக்கு சம்மன்; நாளை முதல் விசாரணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவலர்கள் 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டு 9 போரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் நாளை ஆஜர் படுத்தவுள்ளனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரிகளான தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் அடித்தே கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு அடுத்தடுத்து 9 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தந்தை மகன் உயிரிழந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் என உத்தரவிடப்பட்டது. இதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை முதல் வழக்கு விசாரணை துவங்க உள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 9 போலீசாருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது போலீசாரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஆரம்பம் ஆவதை அடுத்து தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sathankulam ,prison guards ,hearing , Sathankulam father, son murder case ... !! 9 prison guards summoned; First hearing tomorrow
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...