×

இரவிமங்கலத்தில் அகழாய்வு செய்ய வேண்டும்: தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை

பழநி: பழநி அருகேயுள்ள இரவிமங்கலம் பகுதியை அகழாய்வு செய்ய வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே இரவிமங்கலம் கிராமத்தில் முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் வெளிப்படுகின்றன. தற்போது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த சின்னங்கள் அருகி காணப்படுகின்ன. 100 ஏக்கர் பரப்பளவில் நெருக்கமாகவும், மீதமுள்ள 100 ஏக்கர் பரப்பளவில் பரவலாகவும் இச்சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தை அகழாய்வு செய்தால் பல அரிய தகவல்கள் கிடைக்குமென்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, இரவிமங்கலம் பகுதியில் பாலாறு- பொருந்தலாறு அணையின் கிளை வாய்க்கால் தோண்டப்பட்ட போதும், புதையல் வேட்கை- விவசாய பயன்பாட்டிற்காக நிலம் சீரமைக்கப்பட்ட போதும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இருந்த இந்த சின்னங்கள் சிதைந்து மறைந்து போய்விட்டன. மீதமுள்ள 100 ஏக்கரில் 200க்கும் குறைவான சின்னங்களே தப்பி பிழைத்துள்ளன. இரவிமங்கலம் புதைகுழிகள் உள்ள பகுதிகளில் சங்க காலத்தை சேர்ந்த 3 இரும்பு உருக்காலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்கத் தேவையான சுண்ணாம்பு கட்டிகள் இன்றளவும் அந்த இடத்தில் காணப்படுகின்றன.

பொதுவாக சங்ககால புதைகுழிகளான கல்வட்டங்கள் வட்ட வடிவிலேயே காணப்படும். சங்கத்தின் இறுதி, சங்கம் மருவிய காலப்பகுதியை சேர்ந்த சதுர வடிவிலான 2 புதைகுழிகள் இங்கு உள்ளன. இவ்வளவு சிறப்பு மிக்க இரவிமங்கல பெருங்கற்கால புதைகுழிகளை அகழாய்வு செய்து தமிழக வரலாற்றுக்கு ஒரு பேரொளியை பாய்ச்சும் நிகழ்வாக இருக்கும். பாண்டியரின் தலைநகரான மதுரையில் இருந்து பாரசீகம், கிரேக்கம், ரோம் போன்ற பேரரசுகளை இணைக்கும் சங்க கால கொழுமம் பெருவழிப்பாதையின் தென் எல்லையில் இச்சின்னங்கள் காணப்படுவது இவற்றின் கூடுதல் சிறப்பு.

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் உள்ளிட்ட அகழாய்வு களத்திற்கு இணையான, அவற்றை விட பெரிய சின்னங்கள் இந்த இரவிமங்கல பெருங்கற்கால சின்னங்கள் ஆகும். எனவே, இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆணையரை வலியுறுத்தி உள்ளோம். இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த வாரம் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நல்லதொரு தீர்ப்பு கிடைக்குமென்று எண்ணி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Tags : Archaeologists , Archaeologists
× RELATED கீழடி 6ம் கட்ட அகழாய்வு..மீண்டும் மனித...