×

ஆட்சி அமைக்கப்போவது யார்?: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 55 மையங்களில் தொடங்கியது.!!!

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 29ம் தேதி முடிவடைய உள்ளதையொட்டி, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. முடிந்த தேர்தலில் 57.05% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்கும் எண்ணும் மையங்களில் தலா 7 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பும், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி தெரிய வரும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், 31 வயதே நிரம்பிய தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்தேர்தலில் வெற்றி கிடைத்தால், அது கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலத்தை புதுப்பிக்கும் வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது:

இதனைபோல்,மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 12 அமைச்சர்கள் உள்பட 355 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏற்கனவே 107 எம்எல்ஏ.க்கள் உள்ள நிலையில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜ.வுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும். ஆனால் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்க 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மபி உட்பட 11 மாநிலங்களில் நடந்த 56 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.   


Tags : elections ,centers ,Bihar Assembly , Who is going to rule ?: Voting in the Bihar Assembly elections has started in 55 centers !!!
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!