புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த டூவீலர் மெக்கானிக்கின் மகள் ஐஸ்வர்யா, டெல்லியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் பயின்று வந்தார். இந்நிலையில், அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் படிப்பை தொடர முடியுமா? என்ற கலக்கத்தில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டம், சாத்நகரில் உள்ள வீட்டில் கடந்த 2ம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, ராகுல் தனது நேற்றைய டிவிட்டர் பதிவில், ``இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். தேவையற்ற பணமதிப்பிழப்பு, நாடு முழுவதுமான ஊரடங்கினால் மோடி அரசு ஆயிரக்கணக்கான குடும்பங்களை சீரழித்து விட்டது என்பது தான் உண்மை,’’ எனக் கூறி, தெலங்கானா கல்லூரி மாணவியின் தற்கொலை பற்றிய ஊடக செய்தியை இணைத்துள்ளார்.