சென்னை: ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு காணொளி கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி, பெண்கள் குறித்து கருத்து ரிவித்திருந்தார். இதையடுத்து, திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் காசி ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. அவரது சர்ச்சை பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக் கொண்ட, பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது என்ற நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து, மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.