திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், திருப்பதி பத்மா நகரில் 8 வயது சிறுமி ஒருவர் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முன்னா என்பவர் அந்த சிறுமியின் கைகை பிடித்து இழுத்துள்ளார். மேலும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் முன்னாவிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயன்றதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆட்டோ டிரைவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரி அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து முன்னாவை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.