×

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்வு

மஞ்சூர்: தொடர் மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மின் நிலையங்களில் கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்பட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்தி மைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75, என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குந்தா, எமரால்டு உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மின் நிலையங்களில் கூடுதல் மின்சார உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nilgiris , Nilgiris, rainfall, dam, water level
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...