காரைக்குடி: இந்தியா மற்றும் நேபாளில் 20,822 கி.மீ. ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்ட காரைக்குடி சகோதரர்கள் 8 புத்தகங்களில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கே.வேலங்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பாண்டித்துரை (30), கார்த்திகேயன் (27) மென் பொருள் பொறியாளர்களான இருவரும், கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி கே.வேலங்குடியில் இருந்து காரில் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் 49 நாட்களில் 20,822 கி.மீ. காரில் பயணித்து இந்தியாவில் 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் நேபாளத்தில் 501 கோயில்களைத் தரிசனம் செய்துள்ளனர். மேலும் தங்களது பயணத்தை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில், அவர்களது சாதனை ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, வேல்ட் ரிக்கார்ட்ஸ் ஆப் இந்தியா, வஜ்ரா வேல்ட் ரெக்கார்டு, அஸ்ஸட் வேல்ட் ரெக்கார்டு, கலாம்ஸ் வேல்ட் ரெக்கார்டு, யுனிவர்சல் அச்சிவ் புக் ஆப் ரெக்கார்டு, பியூச்சர் கலாம் ரெக்கார்டு ஆகிய 8 புத்தகங்களில் பதிவாகியுள்ளன. மேலும் அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாண்டித்துரை, கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில்: ஆன்மிகச் சுற்றுப் பயணத்திலும் இளைஞர்களுக்கு சந்தோஷம் உண்டு என்பதைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால், அதிலும் எங்களுக்கு 8 விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.