சென்னை: போனஸ் குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்து இன்று போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்துக் தொழிலாளர்கள் 2016ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு இணையாக காரணி 2.57 ஊதிய உயர்வு கேட்டபோது அரசு ஊழியர்களுக்கு போனஸ் இல்லை. போனஸ் 20 சதவிகிதம் பெறுகிறார்கள்.
ஆகவே, காரணி 2.44 ஊதிய உயர்வு வழங்க முடியுமென்றது அதிமுக அரசு. போனஸை காரணம் காட்டி ஊதியத்தை பறித்தவர்கள் நட்டத்தை காரணம் காட்டி போனஸை பறிக்கின்றனர். அரசின் இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், 20 சதவித போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக கட்டமைப்பு தொழிற்சங்கங்கள் இன்று (9ம் தேதி) காலை 10.00 மணியாவில் போக்குவரத்துக் கழக மண்டல, கோட்ட தலைமையகங்களை முற்றுகையிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.