சித்தூர்: கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 850 பாட்டில் மது மற்றும் 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலிருந்து 2 கார்களில் மதுபானங்கள் கடத்தி வருவதாக சித்தூர் கங்கவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சித்தூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கண்ராஜ்பள்ளி கிராமம் அருகே நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெங்களூரிலிருந்து சித்தூரை நோக்கி வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், கர்நாடகா மாநில மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பதி சுந்தரர் காலனியை சேர்ந்த உசேன்பாஷா(29), சப்தகிரி நகர் காலனியை சேர்ந்த பார்க்கவ்(28) என்பதும், பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் அர்ஜூன் உதவியுடன் போலி மதுபானம் சித்தூருக்கு கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 850 பாட்டில் மதுபானம், 2 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.