சூலூர்: சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. பல வருடங்களாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த நிலையில் கோயிலைத் திறந்து பூஜை செய்ய பூசாரி நேற்று காலை வந்தார். அப்போது கோயிலின் கோபுரத்தில் இருந்த செம்புக் கலசம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பூசாரி மூலம் இத்தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி நாகராஜ் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இரிடியம் உள்ளதாக கோயில் கலசங்களைத் திருடும் கும்பல் பழமையான இந்த கோயில் கலசத்தையும் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன்பேரில் அருகிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆராய்ந்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.