வாஷிங்டன்: நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே, தனது வெற்றிக்கு காரணம் என அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், முதல்முறையாக கமலா ஹாரிஸ் பெண் துணை அதிபராகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸ்க்கும் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் ஜோ பிடனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல; அது செயல். கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறைக்கு உதாரணம். அமெரிக்க துணை அதிபராகியுள்ள முதல் பெண்ணாக நான் இருக்கலாம்; ஆனால் கடைசி பெண்ணல்ல. நூறாண்டுகளில் போராடிய அனைத்து பெண்களையும் நினைவுகூர்கிறேன்.
ஒரு பெண்ணை துணை அதிபராக தேர்வு செய்யும் மிகப்பெரிய துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது. நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே, தனது வெற்றிக்கு காரணம். இனவெறியை அகற்றுவோம் என உறுதிபட கூறுகிறேன். வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் வெற்றி; பெருவாரியாக வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.