வாஷிங்டன்: எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்திருக்கிறார்கள் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளை பெற்றதால் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கிறார். மேலும், முதல்முறையாக கமலா ஹாரிஸ் பெண் துணை அதிபராகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸ்க்கும் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் ஜோ பிடனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து, நாட்டு மக்களுடன் உரையாற்றிய ஜோ பைடன், அமெரிக்க மக்கள் எங்களுக்கு தெளிவான வெற்றியை வழங்கியுள்ளனர். அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளோம். பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம், உண்மைக்கு வாக்களித்துள்ளீர்கள். நாட்டுகள் வெற்றி மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை பெறாத வெற்றியை பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அதிக ஓட்டுகள் பதிவான இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு பெருமை அடைகிறோம்.
இதைவிட சிறந்தநாள் வருமென்று நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம். சிவப்பு மாகாணங்கள், நீல மாகாணங்கள் என பிரித்து பார்க்காமல், அனைத்தையும் ஒன்றிணைக்க விரும்பும் அதிபராக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.
குடிபெயர்ந்த ஒரு பெண் முதன்முறையாக துணை அதிபராக தேர்வாகியுள்ளதற்கு வாழ்த்துக்கள். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும், வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை பெறாத வெற்றியை நாம் பெற்றுள்ளோம். எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்திருக்கிறார்கள் என்றார். டிரம்பிற்கு ஓட்டளித்த அனைவரின் ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன் என்றார்.