சென்னை: திமுக திட்டங்களை நாசம் செய்த அதிமுக ஆட்சி இனி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக்கூடாது என்றும், தேர்தல் வெற்றியை கலைஞர் நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். வேலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம்-2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி, மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.தேவராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு தலைமையேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு எந்த புதிய திட்டமாவது கொண்டு வந்தாரா? கிடையாது. தமிழக ஆட்சி அதிகாரத்தை வைத்து தானும் செய்யவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் துணையை வைத்து அவர்களையும் செய்ய வைக்கவில்லை. ஆனால் மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குச் செய்த துரோகத்தை கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதனால் தான் இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக் கூடாத ஆட்சி என்று சொன்னேன். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நாசம் செய்துவிட்டார்கள். புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. எந்த வழியில் பணம் வருமோ அந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி கொள்ளைகளை அடிக்கிறார்கள். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை கோட்டையை விட்டு விரட்ட வேண்டாமா? இந்தப் பத்தாண்டு காலத்தில் தமிழகம் எல்லா வழியிலும் பின் தங்கிவிட்டது. இதனை மீட்டு மீண்டும் நம் பழம்பெருமையை புதுப்பித்தாக வேண்டும்.
மீண்டும் கல்வி இல்லாத, வேலை இல்லாத சமூகமாக தமிழினத்தை மாற்றும் சதியை ஒரு கூட்டம் தொடங்கி இருக்கிறது. அந்தச் சதிக்கு தமிழக அரசு, இந்த அதிமுக ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தேர்தல் என்ற ஜனநாயகப் போரால் தடுக்கப்பட வேண்டும். அதற்காகவே சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இங்கே பேசிய திமுக மாவட்டச் செயலாளர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ‘வெற்றியை எனது காலடியில் சமர்ப்பிக்கப் போவதாகச்’ சொன்னார்கள். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தொடர்ந்து இப்படி உறுதி எடுத்துச் சொல்லி வருகிறார்கள் உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய அன்பான வேண்டுகோளாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.