சென்னை: தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக http://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து நாட்களில், அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கு 17 ஆயிரத்து, 239 பேர், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு, 8,494 பேர் என மொத்தம், 25 ஆயிரத்து, 733 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களில், 7,434 பேர், தனியார் மருத்துவ கல்லூரிகளில், 2,756 என 10 ஆயிரத்து, 190 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விண்ணப்பங்களை முழுவதுமாக சமர்ப்பித்தவர்களுக்கும், சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அதிகளவில் அழைப்புகள் வருகின்றன. எனவே தங்கள் விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டி பதிவுகள் மற்றும் சான்றிதழ் இருந்தால் selmedi@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, விண்ணப்ப பதிவு எண்ணுடன் சேர்க்க வேண்டிய சான்றிதழ்களை இணைந்து அனுப்பலாம். மேலும் மருத்துவ கல்வி அதிகாரிகள் அதனை சம்பந்தப்பட்ட மாணவர்களின் விண்ணப்பத்தில் இணைத்து விடுவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.