சென்னை: உயர்நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் அறநிலையத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூற்றாண்டு பழமையான கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அறநிலையத்துறை தங்கள் இஷ்டத்திற்கு தகுந்தாற் போல் பணிகளை மேற்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்ைக விசாரித்த நீதிமன்றம் நூற்றாண்டு பழமையான கோயில்களை புனரமைக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், உயர்நீதிமன்ற குழு, மாநில அளவிலான குழு, மாவட்ட அளவிலான குழு என அமைக்கப்பட்டது. இக்குழுவிடம் அனுமதி பெற்ற பிறகு தான் நூற்றாண்டு பழமையான கோயில்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், அந்த பணி முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பழமையான கோயில்கள் இடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டம் கார்வழி என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழமையான செல்லாண்டியம்மன் கோயிலை இடிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எந்த கோயிலும் ஒரு செங்கலை கூட அகற்றக்கூடாது. எல்லா நிலைகளிலும் கோயில்கள் பராமரிப்பு தொடர்பாக கமிட்டிகளை அமைத்துள்ளீர்கள், அரசாணையின் அடிப்படையில் கமிட்டி அமைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதன்பேரில், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் அறநிலையத்துறை செயலாளர் விக்ரம்கபூருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், அறநிலையத்துறையில் திருப்பணி தொடர்பான வழக்குகள் வரும் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஆணையர் வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆஜராகி திருப்பணிகள் தொடர்பாக அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதிலை தர வேண்டும். மேலும், உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தகவல்கள் தர வேண்டும். அந்த தகவல்களை ஆய்வு செய்து அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்.
கடந்த 3ம் தேதி கோயில் திருப்பணி தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், ஆதிகேசவன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த உத்தரவு வரும் வரை எந்த கோயிலிலும் ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், திருப்பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாநில, மாவட்ட அளவிலாக அமைக்கப்பட்ட குழு எந்த அடிப்படையில் திருப்பணிகளுக்கு அனுமதி அளிக்கிறது. அந்த குழு அமைக்கப்பட்டதற்கு அரசாணை எதுவும் பிறப்பிக்கப்பட்டதா, எந்த அடிப்படையில் குழு இயங்குகிறது. அதற்காக வழிகாட்டுதல் எதுவும் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். மேலும், கார்வாழி செல்லாண்டியம்மன் கோயில் இடிக்க கூடாது. அடுத்த உத்தரவு வரும் வரை எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.