டெல்லி: நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை எளிமையாக்கும் வகையில் இளம் ஆராச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி தொழில்நுட்ப கழகத்தின் 51 வது பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், சுய சார்பு இந்தியா மிகப்பெரிய சக்தி என கூறியுள்ளார். கோவிட் 19 பல விஷயங்களை, உலகிற்கு கற்பித்துள்ளது என கூறியுள்ளார். இந்தியா தனது இளைஞர்களுக்கு வியாபார யுக்தியை எளிதாக்கி உள்ளதாகவும், இதனால், இளைஞர்கள் வாழ்க்கையை தங்கள் கண்டுபிடிப்புகளால் மாற்ற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு, வியாபாரம் செய்வதை எளிதாக்கும், என்றும், சுலபமான வாழ்க்கைக்கு வேலை செய்யுங்கள் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு துறையிலும் அதிகபட்ச திறனை அடைய நாடு புதிய வழிகளில் செயல்படுவதாகவும் எனவே தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் ஒரு போதும் சமரசம் செய்ய வேண்டாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தொழில் நடத்தும் நடைமுறையை எளிமையாக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சுயசார்பு இந்தியா இயக்கம் வெற்றிபெற, புதிய கண்டுபிடிப்புகள் முக்கிய சக்தியாக அமையும். தாராளமைய கொள்கையுடன் நாட்டின் தேவையில் தன்னிறைவு அடைவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தால் உலக நடைமுறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக வேளாண் துறையில் புதிய தொழில் தொடங்குவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தரம், அளவீடுகள், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இளைஞர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார். நாட்டில் பல்வேறு சட்ட திருத்தங்கள் மூலம், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக உலகிலேயே குறைந்த அளவு பெரு நிறுவனங்கள் வரி இந்தியாவில் விதிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.