×

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நன்றி!: மக்கள் குரல்களுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உறுதி..!!

டெலாவர்: அமெரிக்க அதிபராக நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல விரும்புவதாக அதிபர் தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பெரும்பாலான மாநிலங்களில் முன்னிலையில் இருக்கும் ஜோ பைடன், வில்மிங்டன் நகரில் பேசினார். அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே உள்ள வாக்கு வித்யாசங்கள் தனது வெற்றியை உறுதி செய்திருப்பதாக அப்போது பைடன் குறிப்பிட்டார். தமது ஆட்சியில் அமெரிக்க மக்களின் குரல்கள் அனைத்திற்கும் மதிப்பு அளிக்கப்படும் என்றும் பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறேன்.

எனக்கு எதிராக வாக்களித்த மற்றும் ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் பணியாற்றுவது எனது கடமையாகும். அதுதான் எங்களது பணியாக இருக்கும். கோவிட், பொருளாதாரம், நீதி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டுள்ளோம். விரயம் செய்வதற்கு இனி நேரம் இல்லை. அமெரிக்காவின் எதிர்காலத்தை கட்டமைக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும், 7.4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பது பெறும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பைடன், அதற்கு காரணமான மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 300க்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.


Tags : Joe Biden ,Democratic ,election ,US , US Presidential Election, People, Joe Biden, Thank you
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...