மதுரை : ஆடு துவங்கி ஆடம்பர சொகுசு கார் வரையிலும் ரூ.3 கோடிக்கு சீர்வரிசை கொடுத்து மதுரையில் நடந்துள்ள திருமணம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் நடந்துள்ள ஒரு திருமணத்துக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருள்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ, போட்டோவாக கடந்த இரு நாட்களாக வைரலாகி வருகிறது. இதில் ஆடுகள் முதல் ஆடம்பர சொகுசு கார், தங்கம், வெள்ளி பாத்திரங்கள் வரையிலும் சீர்வரிசையாக வழங்கப்படுவது காட்டப்பட்டுள்ளது.
மேலும், டூவீலர், டிராக்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாமான்கள் என அனைத்து வகை பொருட்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சீர்வரிசை பொருட்களின் மதிப்பு மட்டுமே ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. திருமண மண்டபத்தில் குவித்து வைத்துள்ள இந்த சீர்வரிசை பொருட்களைக் கண்டு அங்கு வந்திருந்தவர்கள் வியந்தனர். தற்போது இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி காண்போரையும் வாய்பிளக்க வைக்கிறது. மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான தமிழரசனின் மகள் திருமணம், கடந்த 4ம் தேதி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மண்டபத்தில் நடந்துள்ளது. அப்போது இந்த சீர்வரிசைப் பொருட்கள் தரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி பகுதிகளில் மாப்பிள்ளைக்கு சீர்வரிசை கொட்டி கொடுப்பது பழக்கத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.