புனே: வாகன சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற கார் ஒன்று, டிராபிக் காவலரை ஒரு கிலோ மீட்டருக்கு இழுத்து சென்றது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சிஞ்சவாட் பகுதியில் நேற்று, போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை செய்தனர். அப்போது, அங்கு வந்த காரில் இருந்த 2 பேர், மாஸ்க் அணியாமல் இருந்தனர். இதனால், காரை நிறுத்தச் சொல்லி காவலர்கள் சைகை செய்துள்ளனர். அப்போது காரை நிறுத்துவது போல் வேகத்தை குறைத்ததால் அருகே சென்றார் காவலர் சாவந்த். ஆனால், திடீரென காரை அவர்கள் வேகமாக ஓட்டினர். காரின் முன்பு வழிமறித்து நின்ற காவலர் சாவந்த், காரின் பேனட் மீது தடுமாறி விழுந்து பிடித்துக் கொண்டார்.
ஆனாலும், காரை நிறுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர்கள் ஓட்டிச் சென்றனர். சினிமாவில் வருவதுபோல் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், போலீசார் அந்த காரை வழிமறித்து, அதில் வந்த இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாவந்த் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.