×

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?: பாதியில் கலையும் வீரர்களின் கனவு

நாகர்கோவில்: சென்னை, கொல்கத்தா உள்பட  பல்வேறு அணிகளுக்காக குமரியை சேர்ந்த பலர் விளையாடி வருகின்றனர். பல்வேறு விளையாட்டுகளில் திறமைகளை வெளிகாட்டி வரும் ஒரு சில வீரர்கள் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் இல்லாததால் தங்களது கனவை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வீரர்கள் பல் விளையாட்டை பாதியில் விட்டு வேறு வேலைகளுக்கு செல்லும் நிலையும் இருந்து வருகிறது. நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு மைதானம் 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து மைதானம், கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, தடகளபோட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளது. அதே வேளையில் ஹாக்கி, ஹெண்ட்பால், டென்னிஸ், கொக்கோ உள்ளிட்ட பல போட்டிகளை நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த விளையாட்டுகளுக்காக வேறு மைதானத்தை அணுக வேண்டிய நிலை உள்ளது.

தமிழக அரசு சார்பில் கோணம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அரங்கம் இறகுபந்து போட்டி நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மைதானம் அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லை என்று காரணம் கூறப்பட்டு வருகிறது.  வாஜ்பாய் பிரதமராக இருந்த போது சாய்சப்சென்டர் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக ராஜாக்கமங்கலம் பகுதியில் சுமார் 52 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. சில நிர்வாக பிரச்சனையால் இந்த மையம் தற்போது வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் சாய்சப்சென்டருக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இறால் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சாய்சப்சென்டர் அமைந்து இருந்தால் சர்வதேச வீரர், வீராங்கனைகள் விளையாட வந்திருப்பார்கள்.

இது தவிர சர்வதேச போட்டிகளும் நடத்த வாய்ப்பாக இருந்து இருக்கும். இதற்கு காரணம் குமரி மாவட்டத்தின் அருகே கேரள மாநிலம் அமைந்துள்ளது. இங்கு திருவனந்தபுரத்தில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. குமரியில் நட்சத்திர ஓட்டல்கள் பல உள்ளன. இதனால் சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருந்தும் சாய்சப் சென்டர் கைநழுவி போனது குமரியை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு பெரிய ஏமாற்றமாகும். குமரி மாவட்டத்தில் கபடிபோட்டிகளில் அளத்தங்கரை, திருனைநார்குறிச்சி, காணிமடம், அழகப்பபுரம், சாத்தான்விளை, மங்காவிளை, மூலச்சல் உள்பட பல அணிகள் தங்களது ஆளுமையை நிலைநிறுத்தி வருகிறது. இந்த அணிகளில் பல வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்னாள் வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

விளையாட்டுகளில் திறமையான பல வீரர், வீராங்கனைகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.  அளத்தக்கரையில் கபடிக்கு என்று பயிற்சி மேற்கொள்ள பல்வேறு மைதானங்களை வடிவமைத்துள்ளனர். இதே போல் தமிழக அரசு உள்விளையாட்டு அரங்கு அமைத்துக்கொடுத்துள்ளது. இந்த உள்விளையாட்டு அரங்கிலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறிய மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளை மாவட்டத்தில் பல கிராமங்களில் உள்ள இளைஞர்கள் தங்கள் பகுதியில் சிறிய இடத்தை மைதானமாக ஆக்கி விளையாடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் சர்வதேச தரம்வாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்க ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் கட்டாயம் தேவையாக உள்ளது. அஞ்சுகிராமம் பேரூராட்சி பகுதியில் உள்ள காணிமடம் ரஸ்தாகாட்டில் உள்ள பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 


Tags : playground ,district ,Kumari , Kumari, sports, stadium, players' dream
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...