சென்னை: தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தாதது குறித்து ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றை காரணம் காட்டி அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் மௌரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில் கிராமங்களின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் எந்த முக்கிய காரணங்களும் இல்லாமல் கிராம சபை கூட்டங்களை ரத்து செய்தது சட்ட விரோதமானது என்றும் குறிப்பிட்டுட்டிருந்தார். ரத்து செய்யப்பட்ட கிராமசபை கூட்டங்களை நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதே கோரிக்கையுடன் திமுக எம்.எல்.ஏ கே.என் நேரு தொடர்ந்த வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.