×

விவசாய நிலங்களில் தேசிய பறவை படையெடுப்பால் டெல்டா விவசாயிகள் அச்சம்

திருத்துறைப்பூண்டி : நெல் பயிர்களை சேதமாக்கும் தேசியப் பறவையான மயில்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வன அதிகாரிகளும், வேளாண்மை துறையும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று ஆதிரங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆதிரங்கம் நெல்ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூறியதாவது: தேசிய பறவையான மயில்கள் மலைப் பகுதிகளில் அல்லது வன விலங்குகள், பறவைகள் சரணாலயத்தில் காணமுடியும். எங்காவது கோயில்களில் அரிதாக காணலாம். ஆனால் இப்பொழுது கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் மயில்கள் கூட்டமாய் காணப்படுகின்றன. மயில்களின் இனப்பெருக்க காலமான வைகாசி முதல் தை மாதம் வரையில் அவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

முன்பெல்லாம் உயிர் வேலிகள் விவசாய நிலங்களை பாதுகாக்க அரணாக இருந்தது. இப்பொழுது உயிர் வேலிகள் அழிக்கப்பட்டதால் ஓணான், பாம்பு, குள்ளநரி, பருந்து, காட்டுப்பூனைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. உணவு சங்கிலி உடைப்பட்டதால் மயில்கள் நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. தேசிய பறவையின் இனப்பெருக்கம் அதிகரிப்பது மகிழ்ச்சி அளித்தாலும் பல இயற்கை இடர்பாடுகளை சமாளித்து உற்பத்தி செய்யப்படும் விவசாய நிலங்களில் மயில்கள் படையெடுப்பது விவசாயிகளை வேதனை அடையச்செய்கிறது.

மயில்களுக்கு பயந்தே காலை முதல் இரவு வரை சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் காவல் காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஒரு சில எளிய முறையில் மயில்களை தங்களது நிலத்திற்கு வருவதை கட்டுப்படுத்தலாம்.

ஒலிகள் எழுப்பும் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் காற்று அடிக்கும்போது பாட்டிலில் உராய்வு ஏற்பட்டு ஒலி எழுப்ப பழைய சிடிகளை காற்றடிக்கும் திசை நோக்கி கட்டிவைத்தால் அதில் வரும் ஒருவிதமான சத்தத்தைக் கேட்டு மயில்கள் ஆள் நடமாட்டம் இருப்பதாக கருதி விளைநிலங்களில் வருவதை தவிர்க்கும். இவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். தேசியப் பறவையான மயில்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வன அதிகாரிகளும், வேளாண்மை துறையும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றார்.

Tags : Delta ,bird invasion ,farmland , Thiruthuraipoondi: Peacocks, the national bird that damages paddy crops.
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு