சீர்காழி : பெருமங்கலத்தில் சுடுகாடு கொட்டகை இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் ஊராட்சி வடக்குவெளி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு கொட்டகை சிதலமடைந்து பல ஆண்டுகளாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுடுகாடு கொட்டகையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்துள்ளது. இடிந்த சுடுகாடு கொட்டகையில் தான் இறந்தவர்களின் உடலை அப்பகுதி மக்கள் எரியூட்டி வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் போது அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சுடுகாடு கொட்டகை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் பழுதடைந்த சுடுகாடு கொட்டகையை இடித்துவிட்டு புதிய சுடுகாடு கொட்டகை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.